Friday, December 21, 2012

இனிமேல் உலகம் அழியாது !!!

எங்கள் நிலங்களில்
வெட்டிப் பிடுங்கி எரிய
பச்சை மரங்கள்
மிச்சம் இல்லை..!

எங்கள் வயல்களில்
விவசாயப்
பயிர் விதைக்க
உயிர் மண் இல்லை..!

எங்கள் நதிகளில்
அணைகட்ட நீரும் இல்லை,
எங்கள் கரைகளில்
அள்ளிக்கட்ட மணலும் இல்லை
( நதிகளே இல்லை )..!!

நாங்கள் ஆக்சிஜனை
சுவாசித்தே
வருடங்கள் பல ஆகிவிட்டது..,

எங்கள் உலகம்
ஏற்கனவே அழிந்துவிட்டது...

எஞ்சியிருக்கும் சில பிணங்கள் மட்டும்
இன்ன பிற அழிக்கிறோம்...!!!

Monday, December 3, 2012

ஊர்ப் பேசிய கனவு


வேம்பாருக்கு
அடுத்த வெட்டுக்காட்டில்
ஒத்தப்பனை பழுக்க
புழுவும் புத்தெரும்பும் தின்னும்,

பழையகாயல்
டையேர்காட்டுப்
பெத்தநாச்சிக்கு வைச்ச பொங்கல்
காக்கையும் குயிலுமே  சாப்பித்தீரும்,

முருகங் கோயில்
தெப்பத்து தண்ணீரை
மீன்கள் முட்டையிட்டுக்
குஞ்சு பொறித்துச்
சுத்தம் செய்யும்,

பார்த்துப் பழகியவை
பார்த்துப் பார்த்துச்
சலிக்காமல்....

கிணறு கண்மாயில்
குளிக்க களைத்ததில்
பின்பகலுக்கு
வேப்ப மரத்தடியில்
வயர்க்கட்டிலில் உறங்கி,,,

ஒரு நிலவுக்கு
ஆயிரம் நட்சத்திரங்களை
துணை வைத்த
சூரியன் தேடி..
இரவில் மொட்டைமாடியில்
உறக்கம் வரும்வரை
ஊர்க்கதை பேசித்திரிய..

முற்றமும்  கொல்லையும்
விட்டு
ஒரு வீடு கட்டியபின் ..
ஊருக்கே வந்துவிடு !!! - என

ஊரே வந்து பேசியது
ஊர்உறங்கிய முந்தைய சாமத்துக் கனவில் .!!