Friday, December 21, 2012

இனிமேல் உலகம் அழியாது !!!

எங்கள் நிலங்களில்
வெட்டிப் பிடுங்கி எரிய
பச்சை மரங்கள்
மிச்சம் இல்லை..!

எங்கள் வயல்களில்
விவசாயப்
பயிர் விதைக்க
உயிர் மண் இல்லை..!

எங்கள் நதிகளில்
அணைகட்ட நீரும் இல்லை,
எங்கள் கரைகளில்
அள்ளிக்கட்ட மணலும் இல்லை
( நதிகளே இல்லை )..!!

நாங்கள் ஆக்சிஜனை
சுவாசித்தே
வருடங்கள் பல ஆகிவிட்டது..,

எங்கள் உலகம்
ஏற்கனவே அழிந்துவிட்டது...

எஞ்சியிருக்கும் சில பிணங்கள் மட்டும்
இன்ன பிற அழிக்கிறோம்...!!!

Monday, December 3, 2012

ஊர்ப் பேசிய கனவு


வேம்பாருக்கு
அடுத்த வெட்டுக்காட்டில்
ஒத்தப்பனை பழுக்க
புழுவும் புத்தெரும்பும் தின்னும்,

பழையகாயல்
டையேர்காட்டுப்
பெத்தநாச்சிக்கு வைச்ச பொங்கல்
காக்கையும் குயிலுமே  சாப்பித்தீரும்,

முருகங் கோயில்
தெப்பத்து தண்ணீரை
மீன்கள் முட்டையிட்டுக்
குஞ்சு பொறித்துச்
சுத்தம் செய்யும்,

பார்த்துப் பழகியவை
பார்த்துப் பார்த்துச்
சலிக்காமல்....

கிணறு கண்மாயில்
குளிக்க களைத்ததில்
பின்பகலுக்கு
வேப்ப மரத்தடியில்
வயர்க்கட்டிலில் உறங்கி,,,

ஒரு நிலவுக்கு
ஆயிரம் நட்சத்திரங்களை
துணை வைத்த
சூரியன் தேடி..
இரவில் மொட்டைமாடியில்
உறக்கம் வரும்வரை
ஊர்க்கதை பேசித்திரிய..

முற்றமும்  கொல்லையும்
விட்டு
ஒரு வீடு கட்டியபின் ..
ஊருக்கே வந்துவிடு !!! - என

ஊரே வந்து பேசியது
ஊர்உறங்கிய முந்தைய சாமத்துக் கனவில் .!!

Monday, November 26, 2012

புள்ளிகள் மோதும் கோடு




ஒரு முறை கூட 
திறக்கப்படாத 
என் வீட்டு 
ஆங்கில அகராதியின் 
வார்த்தைகள் போல் 
பெருகிக் கிடக்கிறது

இரண்டு அதிகாரங்களுக்கு  மேல் 
படித்திராத 
திருக்குறளின் 
காமத்துப் பால் 
கொண்ட பொருள் போல் 
நிறைந்திருக்கிறது 

ஒரு தடவைக்கு மேல் 
திண்ணப்படாமல்  
அலமாரியில் விட்ட 
காய்ச்சல் மாத்திரைகள்
வீசும் நெடி போல் 
அடர்ந்திருக்கிறது 

போதைக்குப் பின் 
பாட்டிலுக்குள் மிஞ்சும் 
கடைசிச் சொட்டு 
மதுவின் 
ரசாயனச் சிரிப்பில்...

தீர்க்கப் படவேண்டியவைகளின் 
வரிசை வட்டமாக விரிதலில்...

புள்ளிகள் மோதும் கோட்டில்...
புரிந்து போகும் பூலோகமும் !!

????

புரியும்படி சொல்லக் கேட்கிறாய்...,

கழிக்க முடியாத 
குப்பைகள் நிறைந்ததுதாண்டா 
நீயும் நானும் 
சேர்த்து சேர்த்து வைத்த 
இவ்வுலகம் !!

Thursday, November 15, 2012

பணம் செய்யாப் பொழுதுகளில்






'ஏ டி எம்' க்கு வெளியே 
கிழிக்கப் படும்                                                                  
காகிதங்களின்  
பூஜ்ஜியங்களில் 
சேமிப்பு !

ஒட்டகத்துத் 
தண்ணீர்ப்பையை 
தயார் செய்ய 
வந்து போகும்  
வசந்த காலத்து வருமானம்  !

அழைப்புக் காருக்கும் 
அரசுப் பேருந்துக்கும் 
நடுவே 
ஏறி இறங்கும்
பங்குச்சந்தை !

கணக்கில் பற்று
மிச்சம் இல்லாத 
பொழுதுகளில் 
ஓய்வெடுக்கும் 
என்னைப் போலவே
என் செல்பேசி..!!

Wednesday, September 5, 2012

தீபங்களை அணைத்த தீ !!

இரண்டு ஆயிரம் போனஸ் கிடக்கும் என வேலைக்குப் போய்
இரண்டு லட்சம் அரசு நிவாரணம் வாங்கிய உடல் கருகிய ஏழை மக்களுக்காக......,

இந்த தீபாவளியை கரி'நாள் ஆக்குவோம்
பட்டாசுக்குப் பதில் மெழுகுவர்த்தி எரிப்போம் !!

பொட்டு வெடி போடும் பொடுசுகளுக்கு பலூன்களை உடைத்து சப்தம் தருவோம் !
அப்பாக்கள் குழந்தைகளோடு ( தவமாய்த் தவமிருந்து!!! ) குலதெய்வம் கோயிலுக்குப் போவோம் !!

கிப்டு பாக்ஸ்' வெடி போடும் மாடி வீட்டுக் காரனை எல்லாம்
சிவகாசியின் சில வெடிக்காத ஆலைகளுக்குச் சுற்றுலா கூட்டிப் போவோம் !!

சட்டத்தின் முன்னால் பட்டாசு முதலாளிகளின் திரியை உரிப்போம்.!
குட்டி ஜப்பானின் எஞ்சிய பட்டாசுகளை எடுத்துப்போய் கூடங்குளம் அனு உலையில் எரிப்போம்..!

துப்பாக்கி' ரிலீசுக்கு ஆயிரஞ்சரம் வெடிக்கும் முன் ..வெடித்துக் கருகிய உயிர்களுக்காய் ஒரு துளி கண்ணீர் வடிப்போம் !!!


இப்படிக்கு ,
சுப்ரமணிய பாண்டி

Tuesday, September 4, 2012

அய்யனார் (யார்) ??


                                                     ( Poto by Thyaharajan Jagadeesan )

பெரிய தொப்பை அய்யனார் கையில் சின்ன அரிவாள்
ஒல்லி மீசைக்கார சுடலை மாடன் கையில் பெரிய அரிவாள் !
முதிய சிற்பி மறந்துபோன முரண்பாட்டை
யார் மாற்றப் போவது ??


சாலையை  வாசல்
ஆக்கிரமித்த வீடுகளில்
எப்படி வளரும்
நேத்திக் கடனுக்கு
நாட்டுக் கோழியும்
ஆட்டுக் குட்டியும் ??

நவீன தமிழ்ப்பெயர் சூட்டும்
'வடமொழி எல்லைகளுக்குள்'
வர முடியுமா
கருப்பசாமியும் முனீஸ்வரனும்???

மதுரை வீரன் , மாடசாமி
கூடவே நின்றாலும் குழந்தைகள்
விளையாடப் பொம்மையேயாகும்
குதிரையும் நாயும் -இனி
எப்படிக் கடவுளாகும் ??

விளையா நிலங்கள்
'ரியல் எஸ்டேட்க்கு'
விலை போன
வேலிகளுக்குள் -இனி
எப்படி வேட்டைக்குப் போக முடியும்
கோட்டைச்சாமி ??

அய்யனாரை
எப்படிப் புரிந்து கொள்ளும்
எதிர்காலம்??

Saturday, September 1, 2012

சார்ந்திருத்தல் ??



பூப்பதற்கே 
மெனக்கெட்டுப் பூக்கும் 
பூக்களிடம் விசாரிக்கக் 
கிடைக்கும் 
சாராதிருத்தலின் 
சாராம்சம் ??

Saturday, August 25, 2012

மழை செய்




ஒற்றையடிப் பாதையாகிப்போன
ஓடையின் ஓரங்களில்
குறு மணலாய்த் தேய்ந்து
கொண்டிருக்கின்றன
கூழாங் கற்கள்..!!

முற்பகல்
வெய்யில் கொண்டு
விரட்டும் போதெல்லாம்
யாரோ ஒரு உழவனின் மதிய உணவிற்கு
ஒற்றை மரமாய் நிழல் கொட்டித்
தனித்திருக்கிறது - வெயிலுக்குக்
கனித்த வேப்ப மரம்.!!

விதைக்காமல்
உழுது கிடக்கும்
கரிசல் வரப்பின் 
மஞ்சநெத்தியில் மொய்க்கும்
முகவரி மறந்த 
மஞ்சள் வண்ணத்துப் பூச்சி ??

வேளாண்(மை) நிலம்
மைதானமாகிப் போன
கானல் நீரின் வெளியில் ,
பசி மயக்கத்தில்
எதையோ பேசிக்
கொண்டிருக்கின்றன
காக்கைகளோடு குருவிகள் ??

வெள்ளாமை இல்லாமலே வளரும்,
வெட்ட வெட்டவும் வளரும்,
கருவேலி மரங்கள்
எரிக்கப்படும் முன்னர்
என்ன சாபம் விட்டதோ
விவாசாயிக்கும்
விளையும் பயிருக்கும் ??

எனக்குத் தெரியாது ...,

நன்செய் புன்செய்
நாளும் பயிர் செய்ய
உண்டு செரித்து உயிர் செய்த
மனிதனில் எவனுக்கு
மழை செய்யத் தெரியும்?

Sunday, August 5, 2012

நவீனத்தின் மீதான பிரக்ஞை


முன் அறிந்த 
அளவுகளின் முனைகளில் 
அமர்வதில்லை 
என் புதிய 
ஓவியத்தின் தோற்றம் !!

புலன் உணர்த்தும் 
நளினங்களை 
சித்தரிப்பதில்லை 
நான் உடைத்துச் செதுக்கிய 
சிற்பத்தின் ரூபம் !!

யாவரும் எழுதி விட்ட 
வரிகளின் மொழியை 
பேசுவதில்லை 
என் இலக்கணத்துக் 
கவிதை நயம்  !!

களம் இன்றித் தொடங்கி
பின் முடிவதாய் 
தொடரும் 
என் ஆக்கத்துக்
கதையின் காட்சி(கள்) !!

மறுபடியும் 
முதலில் இருந்து
தொடர்தலாகவே முடிவடைகிறது 
நவீனத்தின் மீதான என் பிரக்ஞை...?!!!

Saturday, July 28, 2012

எல்லோர்க்கும் பெய்யும் மழை

மேகத்திடம் பிடுங்கிய
மழையை
தரையில் போட்டுச்சென்ற
காற்று ஓர் பறவை





Sunday, July 15, 2012

அகதிகள் நாகரீகம்


கூட்டு அடிமைகள் வாழ்ந்த 
குட்டித் தீவுகளுக்குள் 
தோண்டக் கிடைக்கலாம் 
'அகதிகள் நாகரீகம் ' !!

வீட்டுப் பிராணிகளாய் 
வளர்க்கப் பட்டிருக்கலாம் 
இரத்தம் குடிக்கும் 
விலங்குகளும் பூச்சிகளும்!!!

சூரியனின் எந்தத் 
திசையின் கீழும் 
இருள் அவர்களின் 
நிரந்தரப் பொழுதாய் நீண்டிருக்கலாம்!!!

இதுவரை எழுதப்படாத 
கொலைக் காதைகள் 
புதைக்கப் பட்டிருக்கலாம் 
கற்பினியின் சமாதிக்குள் !!

குருதியின் நிறம் ஒன்றே'என 
மௌனத்தில் உரையாடியிருக்கலாம் 
சடலம் ஆகும்முன் 
சண்டையிட்ட உடல்கள் !!

காகம் எறிந்த கற்களாய் 
பிணங்கள் வீசப்பட்ட 
பெருங்கடல் குவளை 
நிரம்பிப் பொங்கும் 
சுனாமியில் 
தீரக்கூடும் 
இனவெறித் தாகம் !!

கடலின் ஓலத்தை 
மொழிப்பெயர்க்கும் வரை 
நிம்மதியைத் தேடி அலைந்த 
படகின் கதையை - அது 
சொல்லப் போவதில்லை !!!

Friday, July 13, 2012

முகநூல் ( Face Book )



முல்லை பெரியாறு அணையில் மழை பெய்கிறது !

கூடங்குளம் உலையில் மின்சாரம் கிடைக்கிறது !

மூத்த குடிமகன் யாரென்று தேர்தலுக்கு முன்னே தெரிந்து விட்டது!

சில நாட்களாக 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேட்டி இல்லை !

இன்னும் சில நாட்களுக்கு மட்டைப் பந்து போட்டி இல்லை!

நாளை பில்லா - டூ, ட்ரைலர் போடுகிறான் கணேசு !!

மறுபடியும் 'அபியும் நானும்' விமர்சனம் போடுகிறான் அலெக்சு!!

'லைக்' போட யாருமில்லாமல் கவிதை போடுகிறான் எஸ் எம் பாண்டி !!!




Friday, July 6, 2012

வீடாந்தன்மை






பரண் மேல் 
கவிழ்த்திய 
பித்தளை அண்டாவிற்குள் 
எதையோ மறைத்து வைத்து 
மறந்து விட்டாள் பாட்டி!! 

தாழ்வாரத்தில் 
சாய்வு நாற்காலிக்கு
சற்றுத்தள்ளி வைத்து 
இலங்கை வானொலிச் செய்தி 
இரைச்சலின்றிக் கேட்பார் தாத்தா..!! 

திண்ணைக்கு கீழ் 
இரண்டாம் அடுக்கில் 
நாட்டுக் கோழி முட்டை இட்டு 
பாம்பு வந்து தின்றதாக 
பார்த்ததே இல்லை அம்மா..!!

சாரளத்து
ஓரத்துக் கம்பியில் 
வண்ணம் மங்கியபின் 
பொங்கல் மறுபூச்சுக்கு
சுண்ணாம்பே தடவுவார் அப்பா..!!

கொல்லையின் 
வேம்பு - தென்னை - முருங்கை  
வேர்பிடுங்கி 
அம்மி - உரல் - ஆட்டுக்கல் 
அகற்றி...

ஒட்டு வீடு உடைத்த 
விரிந்த பரப்பில் 
மாடி வீடு எழுப்பிய 
கூரையின் உயரத்தில்..

ஒவ்வொரு 
தொடர் மின்வெட்டுப்
பொழுதுகளிலும் 
தொடர்ந்து தேடுகிறேன் ..,

புதிய வீடு கட்டிப் 
புதைந்த 
வீடாந்தன்மையை ..!!!