Friday, July 6, 2012

வீடாந்தன்மை






பரண் மேல் 
கவிழ்த்திய 
பித்தளை அண்டாவிற்குள் 
எதையோ மறைத்து வைத்து 
மறந்து விட்டாள் பாட்டி!! 

தாழ்வாரத்தில் 
சாய்வு நாற்காலிக்கு
சற்றுத்தள்ளி வைத்து 
இலங்கை வானொலிச் செய்தி 
இரைச்சலின்றிக் கேட்பார் தாத்தா..!! 

திண்ணைக்கு கீழ் 
இரண்டாம் அடுக்கில் 
நாட்டுக் கோழி முட்டை இட்டு 
பாம்பு வந்து தின்றதாக 
பார்த்ததே இல்லை அம்மா..!!

சாரளத்து
ஓரத்துக் கம்பியில் 
வண்ணம் மங்கியபின் 
பொங்கல் மறுபூச்சுக்கு
சுண்ணாம்பே தடவுவார் அப்பா..!!

கொல்லையின் 
வேம்பு - தென்னை - முருங்கை  
வேர்பிடுங்கி 
அம்மி - உரல் - ஆட்டுக்கல் 
அகற்றி...

ஒட்டு வீடு உடைத்த 
விரிந்த பரப்பில் 
மாடி வீடு எழுப்பிய 
கூரையின் உயரத்தில்..

ஒவ்வொரு 
தொடர் மின்வெட்டுப்
பொழுதுகளிலும் 
தொடர்ந்து தேடுகிறேன் ..,

புதிய வீடு கட்டிப் 
புதைந்த 
வீடாந்தன்மையை ..!!!

No comments:

Post a Comment