Saturday, August 25, 2012

மழை செய்




ஒற்றையடிப் பாதையாகிப்போன
ஓடையின் ஓரங்களில்
குறு மணலாய்த் தேய்ந்து
கொண்டிருக்கின்றன
கூழாங் கற்கள்..!!

முற்பகல்
வெய்யில் கொண்டு
விரட்டும் போதெல்லாம்
யாரோ ஒரு உழவனின் மதிய உணவிற்கு
ஒற்றை மரமாய் நிழல் கொட்டித்
தனித்திருக்கிறது - வெயிலுக்குக்
கனித்த வேப்ப மரம்.!!

விதைக்காமல்
உழுது கிடக்கும்
கரிசல் வரப்பின் 
மஞ்சநெத்தியில் மொய்க்கும்
முகவரி மறந்த 
மஞ்சள் வண்ணத்துப் பூச்சி ??

வேளாண்(மை) நிலம்
மைதானமாகிப் போன
கானல் நீரின் வெளியில் ,
பசி மயக்கத்தில்
எதையோ பேசிக்
கொண்டிருக்கின்றன
காக்கைகளோடு குருவிகள் ??

வெள்ளாமை இல்லாமலே வளரும்,
வெட்ட வெட்டவும் வளரும்,
கருவேலி மரங்கள்
எரிக்கப்படும் முன்னர்
என்ன சாபம் விட்டதோ
விவாசாயிக்கும்
விளையும் பயிருக்கும் ??

எனக்குத் தெரியாது ...,

நன்செய் புன்செய்
நாளும் பயிர் செய்ய
உண்டு செரித்து உயிர் செய்த
மனிதனில் எவனுக்கு
மழை செய்யத் தெரியும்?

1 comment:

  1. அன்பு தமிழ் உறவே!
    வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "மழை" யில்

    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete