Friday, March 16, 2012

இலங்கைக் கொலைக் களத்திலிருந்து ..தமிழ்த் தாய்க்கு ஒரு வேண்டுகோள்

கண்ணகிகள் 
கற்பழிக்கப் பட்டு 
பூம்புகார் 
எரிக்கப் பட்ட பின்னர் 
எதற்கு 
உன் கால் சிலம்பு ??

அட்சயப் பாத்திரம் - ஏந்திப் 
பிச்சைக் கேட்டும் 
அகதியாய் - நிவாரண 
ஆடைக்கு நின்றும் 
ஆன பின்னர் 
எதற்கு மணி மேகலை ??

பருவப் பத்திரை'கள்
மார்புகள் பந்தாடிக் 
கூந்தல் அறுத்துக் 
கொன்று குவியுண்ட பின்னர் 
எதற்கு குண்டலகேசி தண்டட்டி ??

காலம் கடந்தும் 
நீதி பெறாமல் 
காளி தேவி 
சாட்சி தராமல் 
குலமே 
கொலையுண்ட  பின்னர் எதற்கு 
வளையாபதி ???

நிலவில் ஆடிய 
முற்றம் 
முற்றிலும் 
சுடுகாடாகிச் 
சிந்திய இரத்தம் 
இன்னும் உறையாமல் இருக்கையில் 
எதற்குச் சிந்தாமணி ???

பௌத்தம் - சமணம் 
கூறிய அர்த்தங்கள் 
மாறிய பின்னர் 
உன் அங்கங்களில் 
அவை எதற்கு ???

துறந்து வா 
தாயே ...

உன்னை 
மதம் இன 
மரபுகள் இல்லாத 
புதிய அணிகலப்படுத்த
புறப்பட்டுவிட்டேன் 
-சுப்ரமணிய பாண்டி !!!!

No comments:

Post a Comment