Saturday, March 3, 2012

நினைவுகளை உருவாக்குவோம்

இனி ஒருபோதும்
நினைவுகளின்
இருக்கையை
முன்பதிவு செய்ய வேண்டாம்

அவை
தானாகவே
வந்து
தடம் பதிக்கட்டும் ...!!

இனி ஒரு போதும்
இன்பச் சுற்றுலாவின்
முன் திட்டமிடல் வேண்டாம்

திசை மாறிய காற்று
நம்மை
தூரலில்
நனைக்கட்டும்..!!

இனி ஒரு போதும்
இடை நிறுத்தம் இல்லா
விரைவுப் பேருந்துப் பயணம் வேண்டாம்

சாலையோர இளநீர்
சற்று நம்
தாகம்
தீர்க்கட்டும்..!!

இனி ஒரு போதும்
நினைவுகளை
படம் பிடித்து
பத்திரப் படுத்த வேண்டாம்

நீக்கமற
காட்சியாய்
கண்களில்
நிறையட்டும்..!!

இனி ஒரு போதும்
முத்தங்களை
கடிதங்களில்
எழுதிச் சேமிக்க வேண்டாம்

பார்த்த
நொடிகளில்
பரிமாறிக்
கொள்ளட்டும்..!!

இனி ஒரு போதும்
அடுத்த வேளைக்கு
மிச்சம் வைக்க வேண்டாம்

விடியல்
மட்டும்
இரவை
விரட்டட்டும்..!!

இனி ஒருபோதும்
நினைவுகளின்
இருக்கையை
முன்பதிவு செய்ய வேண்டாம்

அவை
தானாகவே
வந்து
தடம் பதிக்கட்டும்....!!!

இன்னும் 
அடுத்த ஐந்து ஆண்டிற்கும்
அழியாமல்
இருக்கட்டும் 

விளையாட்டாக 
ஒரு பேருந்து நிறுத்த
உட்சுவற்றில்
கரித்துண்டால்
பொறித்து வைத்த
நம் பெயர்கள் ...!!!

2 comments:

  1. இனி ஒருபோதும் - நீ
    எழுதுவதை நிறுத்த வேண்டாம்.
    உன் கவிதைகள்
    நினைவுகளை, நாளைய நினைவுகளை
    உருவாக்கிக்கொண்டு
    இருக்கட்டும்!
    -வாழ்த்துக்களுடன் அசின் சார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் !!! தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன் !!!

      Delete