Tuesday, February 28, 2012

பங்குனித் திருவிழா

அமிர்தக்கா பாட்டிக்கு
வாரிசு இல்லை
ஆடிக் குறி சொல்ல
அடுத்து ஆள் இல்லை

வில்லுப் பாட்டுக் காரனுக்கு
தொலைபேசி எண் இல்லை -அவன்
வீட்டு முகவரி
விழாக்கமிட்டிக்கு
தெரியவில்லை

கரகாட்டம்
தெருவில் ஆட
காவல்துறையின்
அனுமதி இல்லை

திங்கள் கிழமை
முளைப்பாரி , பால்குடம்
தினைமாவும் பானக்காரம்
திண்பதற்கு
பள்ளியில் விடுமுறை இல்லை

மஞ்சள் நீராடிய
வண்ணங்களில்
மஞ்சள் நிறமில்லை
அடுத்த தெருவில்
அத்தை மகள் இல்லை

அன்னதான
கடைசிப் பந்திக்கு
அப்பளமும் பாயாசமும்
எப்போதும்
மிஞ்சுவதே இல்லை

நெரிசலில்
மிதிபட்டாலும்
பிள்ளையார் எறும்புகள்
பிறரைக் கடிப்பதில்லை..!!!

No comments:

Post a Comment